Sivaraj Parameswaran
இணைகோடுகள் - ஒன்று
Updated: Aug 26, 2022

வழக்கம் போல் அன்றும் வேலு ஆபீஸில் மும்முரமாக orkut-ல் நோண்டிக் கொண்டிருந்தான். orkut என்பது இன்றைய facebook போல அன்றைய கால facebook. வேலு ஒரு தனிமரம் அதிலும் காஞ்ச மரம் என்பதால் பெண்களை கவரும் வண்ணம் கவிதைகள் எழுதி orkut-ல் பதிவிடுவது என்பது வேலுவின் வழக்கம்! 200 கவிதைகள் மேல் எழுதியிருந்தாலும் ஒரு பெண் கூட இவனுக்கு படியவில்லை. காரணம் சொல்லவா வேண்டும் வேலுவின் குணம் அப்படி, எதையும் நேராக சொல்லுபவன் வேலு! ஒரு பெண்ணிடம் ஏன் பழகுகிறோம் என்பதற்கு உன்னோடு படுப்பதற்குத்தான் என்று வெளிப்படையாக சொன்னால் எப்படி? பெண்கள் தலை தெறிக்க ஓடினார்கள்! பெண்களின் பிளாக் பட்டியலில் வேலு நிரந்திர குடிமகனானான்.
சொல்ல மறந்துவிட்டேன் வேலுவிற்கு அவன் செய்துகொண்டிருந்த அந்த வேலை சுத்தமாக பிடிக்கவில்லை! அவனுக்கு வெளியூர் சென்று படிக்க வேண்டும் இந்த பரந்த உலகை ரசித்து அதன் கலையையும் கலாச்சாரத்தையும் அறிந்து அதில் ஒன்றன கலக்க வேண்டுமென்பது அவன் ஆசை! அளவுகடந்த ஆசை என்பதாலே கடவுள் வேலுவிற்கு ஆப்பு வைத்தான்! வேலுவின் தாய் தந்தைக்கும் வேலு ஒரே பிள்ளை! அதிலும் செல்லப்பிள்ளை! செல்லம் என்றாலும் குதிரை குண்டுச் சட்டியில் ஓடிய கதை தான்.
ஒரே மகன் என்பதால் மகன் தங்களை விட்டு எங்கும் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார்கள் வேலுவின் பெற்றவர்கள். இதற்கு செல்லம் என்பதை விட பாசம் என்று கூட சொல்லலாம்! இந்த பாச போரில் தாய் தந்தையிடம் தோற்று போன வேலு கனவுகளை சாக்கு மூட்டையில் கட்டி கடலில் எறிந்தான். அவனுக்கு வலித்ததோ இல்லையோ என்று யாரும் கேட்கவும் இல்லை அவன் சொல்லவும் இல்லை, அப்படியே சொன்னாலும் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை! அவனவன் வலி அவனவனுக்கு பெரிது அடுத்தவன் வலி அவனவனுக்கு அரிது (யாரையும் மனதில் வைத்து எழுதியது அல்ல, சிரித்துக்கொண்டே எழுதியது)
இப்படியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, ஒரு மாலை நேரம் சீதா வேலுவிற்கு orkut chat-ல் மெசேஜ் செய்கின்றாள். வேலு ஒரு நிமிடம் திடுக்கிடுகின்றான். சீதா வேலுவின் கல்லூரி தோழி ரொம்பவும் நெருக்கமான தோழி, என்று வேலு நினைத்துக்கொண்டான். நிஜத்தில் அங்கு பல நெருங்கியர்வர்கள் இருந்தனர் அதில் வேலுவும் ஒருவன் என்று அவனுக்கே தெரியாமல் இருந்தது தான் ஆச்சரியம். ஆச்சரியம் என்பதை விட வேலு ஒரு கேன புண்ணாக்கு, அவளை நிஜம் என நம்பினான்! சரி கதைக்கு வருவோம்.
சீதா கல்யாணம் ஆன பின் கணவனுடன் ஆஸ்திரேலியா சென்று குடியும் குடுத்தனமாக வாழ்ந்து வந்தாள். ஆச்சரியம் என்ன வென்றால் எல்லா முக்கிய நண்பர்களுக்கும் கல்யாணம் முடிந்து கணவனுடன் சேர்ந்து விருந்து அளித்தாள் வேலுவை மட்டும் அழைக்கவில்லை. வேலு மனம் புழங்கினான். சொல்லப்போனால் inferiority complex கூட வேலுவிற்கு வந்தது! கோபம் தலைக்கு ஏறியது! என்ன செய்ய! ஒன்றும் செய்ய முடியாமல் யாரிடமும் பேசவும் முடியாமல் தவித்தான். நண்பர்களிடம் சொன்னால் கேலிசெய்வார்கள் என்ற பயத்தில் சொல்லாமல் உள்ளுக்குள் புழுங்கினான். அவள் ஆஸ்திரேலியா சென்றது கூட வேரோவர் மூலம் தான் தெரியவந்தது. இப்படியாக அவளிடம் தொடர்ப்பு துண்டிக்க பட்டு இரண்டு வருடங்கள் கழித்து இந்த மெசேஜ் வர வேலு திடுக்கிடுகின்றான்.
Chat-ல் எப்படி இருக்கே நல்லா இருக்கியா என்ற வழக்கமான சம்பாஷணைகள் முடிந்து அவள் மொபைல் நம்பர் கேட்க வேலும் கொடுத்தான் மறு நொடியே அவள் வேலுவின் மொபைலில் அழைக்க, வேலு சற்றும் யோசிக்காமல் மொபைலை எடுத்தான். விட்ட இடத்திலிருந்து தொடங்குவது போல் இருந்தது வேலுவிற்கு! தனது கல்லூரி தோழி அதுவும் நெருக்கமான தோழி தன்னை பற்றி எல்லாம் தெரிந்தவள்! தன் ஆன்மா என்று கூட கூறலாம் பிசுறு தட்டாமல் எல்லா விவரங்களையும் நம்பி அவளிடம் சொல்லியிருக்கின்றான்! அந்தரங்கங்களும் அடங்கும்! இவ்வளவு நெருக்கமானவள் தொலைந்து போய் திரும்பவும் வரவே குதூகலமும் இனம் புரியாத சந்தோஷமும் வேலுவை குளிரச் செய்தது. ஒரு மணி நேரமாக பேசியது நொடிகளாய் பறந்தது.
பழைய கல்லூரிகதைகள், வேலுவின் பழைய காதல் கதைகள் சீதாவின் லீலைகள் என பேசி சிரித்துக்கொண்டிருக்க. வேலு அவளிடம் அந்த தேவை இல்லாத ஒரு சாதாரணமான கேள்வியை கேட்டான் "உன்னை உன் புருஷன் சந்தோசமா வச்சுயிருக்கானா?" அந்த அபாயகரமான அந்த கேள்வி வேலுவின் மொத்த வாழ்க்கையையும் சீரழித்தது.
சீதா கண் கலங்கி அவள் புருஷன் ஒரு ஆண்மை அற்றவன் என்று சொல்ல மீண்டும் திடுக்கிட்டான் வேலு. சீதா தெள்ளத்தெளிவாக மேலும் விவரிக்க கண் கலங்கினான் வேலு. அந்த ஒரு வலுவிழந்த நொடியில் அவள் கூறிய அந்த வார்த்தைகள் வேலுவின் வாழ்க்கையை திருப்பிப் போட்டது, அந்த வார்த்தைகள் "நான் டிவோர்ஸ் வாங்குனாலும், இனி என்னை யாரு கல்யாணம் பண்ணிப்பா?" மறுநொடி யோசிக்காமல் வேலுவிடம் பதில் வந்தது "யாரும் வரலைன்னா என்ன நான் உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்!!" என்று வாய்விட்டு சொன்ன அந்த வார்த்தைகள் வேலுவின் வாழ்க்கை பாதையை மாற்றியது.....
பாதை மாறிய வாழ்க்கை...தொடரும்...
கற்பனை கதையாக எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.