top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

ஒரு முழு காம காதல் கதை

Updated: Aug 26, 2022



மறுப்பு அறிவிப்பு : தலைப்பின் பெயருக்கும் இந்த கதைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு ஆனால் அந்த சம்பந்தம் நீங்கள் நினைப்பது போல் உள்ள சம்பந்தமோ சம்பவமோ கிடையாது இருப்பினும் இல்லாமலும் கிடையாது இது இல்லை ஆனால் இருக்கு என்பது போல் அல்ல. கதையை படித்தால் உங்களுக்கு அந்த அர்த்தம் கதையோடு தொடர்புடையது என்று தெள்ள தெளிவாக முடிவில் தெளிவுபடுத்தப்படும். நன்றி இப்பொழுது இந்த கற்பனை கதைக்குள் செல்வோம்!

கோபி தனது ஹீரோ சைக்கிளில் மளிகை சாமான் வாங்கிக்கொண்டு பிளாட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான். சைக்கிளை பிளாட்டின் பார்க்கிங்கில் விட்டு மளிகை மூட்டையை தூக்கிக்கொண்டு லிப்ட்டின் உள்ளே செல்ல, மல்லிப்பூ வாசம் விஷம் போல கோபியின் மூளையை கிரங்கச்செய்கின்றது. மல்லிப்பூ மயக்கத்தில் அவன் கண்களை மூட லிப்ட்டின் கதவும் தானே முடிகின்றது. நேரே முன்றாவது மாடியில் சென்று நின்று லிப்ட்டின் கதவு திறக்கின்றது. தலையில் மல்லிப்பூவுடன் பின்னழகை காட்டி யாரோ ஒரு பெண் நடந்து செல்கின்றாள். சரோஜா என்று யாரோ அழைக்க சிகப்பு சுடிதார் அணிந்து அந்த பெண் முகக்கவசத்தை அவிழ்த்து திரும்பி கோபியை பார்க்க, அவளின் முக அக அழகை கண்டு, ஒரு கணம் நேரம் நின்றது போல் உணர்கிறான் கோபி. அவள் இவனை நோக்கி நடக்க அவனை சுற்றி 5.1 dts அதிர்வில் பாடல் ஒன்று ஒலிக்கின்றது...



உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே
உயிர் வார்க்கிராய்
எனை சேர நீ
எது கேட்கிறாய்
சொல்...


சரோஜா லிப்ட்டின் கதவின் நடுவில் கால்வைத்து அவன் அருகில் வந்து நிற்க பின்னாலிருந்து யாரோ அவனை குத்தி "கொஞ்சம் நகரு தம்பி மூட்டையை மூஞ்சுல வச்சு இடிச்சுக்கிட்டு..." என்று பின்னாலிருந்து ஒரு குரல் வர கோபி திரும்பி பார்க்க ஒரு பாட்டி அவனை தள்ளிவிட்டு "தடி மாடு மாதிரி நிக்குறான் பாரு... வழி விடுறா மூதேவி..." என்று முணுமுணுத்துக்கொண்டே பாட்டி கோபியை இடித்து கடந்து செல்கின்றாள்.

சரோஜா பாட்டியிடம் பேசிக்கொண்டே கோபியை பார்க்க கோபி சிரிக்க, முகத்தை முகக்கவசம் மூடி இருப்பது ஞாபகம் வந்து அவசரத்தில் தனது மககவசத்தை அவிழ்க்க; சரோஜா லிப்ட்டின் இடுக்கில் இருந்த அவளது கால்களை எடுக்க; லிப்ட் கதவு தானே மூடிக்கொண்டு வேகமாக ஆறாவது மாடிக்கு செல்கின்றது. ஆறாவது மாடியில் லிப்ட்டின் வெளியே கோபியின் அம்மா கீழே வாக்கிங் செல்ல நின்றுகொண்டிருக்க அவரிடம் "அம்மா இத புடி தோ இப்போ வந்துடுறேன்" "டேய் இப்போ தானே டா வந்தே அதுக்குள்ள எங்க ஊர் சுத்தப்போற? நாளைக்கு உனக்கு காலேஜ் இல்ல?" "அம்மா online class தானே 5 நிமிஷத்துல வந்துடுறேன்!!" மளிகை சாமானை அம்மாவிடம் கொடுத்து விட்டு மறுபடியும் மூன்றாவது மாடிக்கு லிப்ட்டில் செல்கின்றான்.

மூன்றாவது மாடியின் காரிடோர் காலியாக இருக்கின்றது. ஏதோ ஒரு வீட்டிலிருக்கும் டிவியில் "உன் பார்வை மேலே பட்டால்" பாடல் தொடர்ந்து சத்தமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது...


உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என் கின்றேன்...

கோபி காரிடோர் காரிடோராக தேடி அலைந்தது தான் மிச்சம் எங்கு தேடியும் சரோஜா கிடைக்கவில்லை, சோகத்தில் துவண்டு லிப்ட்டின் வாசலின் முன் ஆறாவது மாடி செல்ல காத்து நின்றுகொண்டிருந்த பொழுது, லிப்ட் கதவு திறக்கின்றது அவன் தேடி வந்த சரோஜா லிப்ட்டின் உள் நிற்க ஆச்சரியத்தில் உறைந்து நிற்கின்றான். இவன் அசைவின்றி நிற்பதை கண்டு அவள் "உள்ள வறீங்களா?" என்று கேட்க தன்னிலை உணர்ந்ந்து லிப்ட்டின் உள்ளே வருகின்றான். ஏற்கனேவே ஆறாவது மாடிக்கு அவள் செல்ல ஆறை அழுத்தியது அவனுக்கு ஒரு சிறு சந்தோசத்தை தந்தது! லிப்ட் கதவு மூட "நீங்களும் 6த் floor-அ" என்று கேட்க அவள் ஒரு சிறிய புன்முறுவலுடன் "அமாம்" என்று பதில் கூற, பாதியில் நின்று விட்ட பாடல் மறுபடியும் அவனது மண்டைக்குள் பாட தொடங்குகிறது. லிப்ட் கதவு திறந்தவுடன் அவள் நேரே நடந்து பிளாட் நம்பர் 602-விற்கு செல்கின்றாள். இவன் குதூகலத்துடன் நடனமாடி தனது பிளாட் 601-ற்கு செல்கின்றான்.


கோபி சரோஜாவை கண்ட சந்தோஷத்தில் நடு ஹாலில் நடனமாட, கோபியின் அம்மாவும் அப்பாவும் டைனிங் டேபிலிலிருந்து பேய் அறைந்தது போல் இவனை பார்க்கிறார்கள்! கோபியின் அம்மா அங்கிருந்து "டேய் என்னடா பண்றே?" "பார்த்தா தெரியல உன் புள்ள டான்ஸ் ஆடுறான்!" என்று அப்பா சொல்ல "இல்ல அப்பா காலேஜ்ல ஒரு டான்ஸ் காம்பெடிஷன்! அது தான்!!" என்று மழுப்பி கோபி பேச "மவனே அப்பாவும் காலேஜ் படிச்சு தான் டா என்ஜினீயர் ஆனேன்!! உன் வெங்காயத்தை உங்க அம்மாகிட்ட உருட்டு பா தம்பி!!" என்று நாசுக்காக சொல்ல "என்னங்க வளருற பையன் அவனை போய் சந்தேக பட்டுட்டு!!" "அடியேய் அவனே ஏதோ பொண்ண சைட் அடிச்சுட்டு துள்ளி குதிக்கிறானா! இவ வேற அவன நம்புது!! எல்லாம் உங்க அப்பனே சொல்லணும்!! என்று முணுமுணுக்க "என்ன சொன்னீங்க?" "உன் பையன் சிம்பு மாதிரி பெரிய டான்சரா வருவான்னு சொன்னேன்!!"என்று சிரித்துக்கொண்டே மழுப்பி அவர் சொல்ல "என் பையன்னுக்கு என்ன கொறச்சலு! அவன் கமலஹாசன் மாதிரி வருவான் வேணும்னா பாருங்க!!" என்று கோபியின் அம்மா பெருமை பட, கோபி சிரித்து வெக்கப்பட்டு தனது அறைக்கு செல்கின்றான்.

அறையில் கட்டிலின் மீது பறந்து வந்து விழுந்து தனது ப்ளூ டூத் ஸ்பீக்கரை ஆன் செய்ய,



ஆ ஹோ
என்னன்னமோ பண்ணுது பண்ணுது
ஆ ஹோ எ
என்னன்னவோ ஆகுது ஆகுது
எல்லாம் உன் உடும்பு
செய்கிற வேலை
உள்ளோடும் நரம்பு
செய்யுது இம்சை...

சென்னை 68 படத்திலிருந்து யுவனின் பாடலை கேட்டு கட்டிலின் மீது சரோஜாவை நினைத்து உருளுகின்றான். பாடலின் வரிகளும் காம சுரங்களும் கேட்டு கோபியின் அப்பா அறைக்குள் ஓடி வந்து! "டேய் நைட்டு இந்த மாதிரி பாட்டெல்லாம் போடாதடா! பக்கத்து வீட்டுக்காரன் என்னைய என்ன நினைப்பான்! ஐயர் மாமா நாளைக்கே அஸோஸியேஷன்ல பிராது கொடுப்பாருடா!! இம்சை பண்ணாம கொஞ்சம்! மூடிட்டு தூங்கேன்டா!!" என்று கெஞ்ச ஸ்பீக்கரை அணைத்து ஹெட் செட்டை மாட்ட!! ஒரு பெரிய நமஸ்காரம் போட்டுவிட்டு அறையை விட்டு வெளியே வருகின்றார் கோபியின் அப்பா...


அடுத்த நாள் சரோஜாவை காண பால்கணியில் காலையில் excercise செய்ய ஆரம்பிக்கின்றான் கோபி, ப்ளூ டூத் ஸ்பீக்கரில்



என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

"ஏன்டா விடியாது?" என்று முணுமுணுத்து ஹால்லிலேருந்து கோபியின் அப்பா கோபியை எட்டி பார்க்க அவன் மும்முரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். "யாருக்காக இந்த பிட்டு போடுறான்? இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்!" என்று அவர் மனதில் சொல்லி முடிக்க எதிர் வீட்டின் பால்கணியில் சரோஜா கையில் காபி கப்புடன் வந்து நிற்க "ஓ இவளுக்குகாகத்தான் இந்த கூத்தா!!" என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க பின்னாலிருந்து கோபியின் அம்மா "என்ன எட்டி எட்டி பார்க்குறீங்க?" என்று கேட்க நியூஸ் பேப்பர் படிப்பது போல் "இல்ல பக்கத்து வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு போல!!" ஆச்சரியத்துடன் "உங்களுக்கு எப்படி தெரியும்?" "உன் பையன் excercise பண்றத பார்த்தாலே தெரியல?" என்று கோபியின் அப்பா சிரிக்க, கோபத்துடன் "உங்களுக்கு எப்பப்பார்த்தாலும் என் பையன குறை சொல்லறதே வழக்கமா போச்சு! டேய் வந்து பூஸ்ட் குடிடா! இந்தாங்க உங்களுக்கு காபி!!" எதுவும் தெரியாதது போல கோபி அங்கு வந்து பூஸ்ட்டை குடித்துக்கொண்டே "அம்மா யாரம்மா பக்கத்து வீட்டுல புதுசா ஒரு பொண்ணு?"என்று கேட்க இதை கேட்ட கோபியின் அப்பா குபீரென்று சிரித்து காபியை துப்புகின்றார்! இதை கண்டு கோபத்தில் கோபியின் அம்மா "அவ முழுகாம இருக்கா! அவ புருஷன் வேற அமெரிக்கா போய்ட்டதால அவ அம்மா வீட்டிக்கு வந்திருக்கா" சிரித்துக் கொண்டே கோபி "சும்மா கலைக்காதம்மா!! பார்த்தா காலேஜ் படிக்குற பொண்ணு மாதிரி இருக்கா!!" என்று சொல்லி சிரிக்க, கோபியின் அப்பா சத்தமாக சிரிக்கின்றார் அம்மா கோபத்தில் கரண்டியை கோபியின் அப்பா மீது எரிய "ஏண்டி உன் பையன் பண்ண கூத்துக்கு ஏன் டி என்னைய அடிக்குற?" என்று அவர் கத்த... உண்மை நிலை அறிந்து கண் கலங்க கோபி பால்கணி பக்கம் திரும்ப... சரோஜா இவனை கண்டு சிரித்துக்கொண்டே காபி குடிக்க.... ப்ளூ டூத் ஸ்பீக்கரில்



இதுவரை இல்லாத உணர்விது,
இதயத்தை துண்டாக்கும் நினைவிது, 
மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே... 
காதல் என்றால் அத்தனையும் கனவு.... 
கண்மூடியே வாழ்கின்ற உணர்வு.... 
பெண்கள் என்றால் ஆண்னை கொள்ளும் நோய் ஆனதே... 
ஐயோ இந்த இளமையின் தொடக்கம்... 
இன்றே முற்றுப்புள்ளி, 
அதை சொல்லமால் சொல்லி,
நம்மை பைத்தியம் ஆக்கும், 
பெண்ணை தேடி தொலையதே...

என்ற அருமையான பாடல் ஒலிக்கின்றது... "அடேய் கோபி அந்த பாட்டத்தான் நிறுத்தி தொலையேன்!!" என்று கோபியின் அப்பா கத்த... பாடல் நிற்கின்றது!!


இப்பொழுது தலைப்பின் அர்த்தம் புரியும் என்று நம்புகின்றேன்!! அப்படியும் புரியவில்லை என்றால் "ஒரு முழுகாம(கர்ப்பவதி) - காதல் கதை" இது உங்களுக்கு எரிச்சல் அடைய செய்தால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது! இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்து தனித்து கொள்ளவும்! குடிப்பழக்கம் உள்ளவர்கள் கோபத்தில் குடிக்க வேண்டாம் அது உங்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். புகை பழக்கம் உள்ளவருக்கும் அதே அறிவுரை தான்.


வழக்கம் போல இதுவும் கடந்து போகும் என்ற வாக்கியத்தை நினைவில் கொண்டு இந்த கதையை கடந்து போகவும்! நல்ல கற்பனை கதை எழுதும் வரை என் உயிர் மூச்சு உள்ள வரை உங்களை நான் எழுதிய கதைகளை படிக்க தொந்தரவு செய்து கொண்டிருப்பேன்! பொறுத்துக்கொள்ளவும்!



நல்ல கற்பனை கதை எழுதும் வரை,

சிவராஜ் பரமேஸ்வரன்.

0 views0 comments

Recent Posts

See All
bottom of page